சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவன் மரணத்திற்கு பிறகு ஆசிரியர் மீது நடவடிக்கை.

28 January 2025


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர் பாண்டி முருகன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு கைலாசம் - வளர்மதி தம்பதியின் மகன் சக்தி சோமையா 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 24 ஆம் தேதி) வகுப்பறையில் கம்ப்யூட்டரை ஆன் செய்யுமாறு ஆசிரியர் கூறியதாகவும், அதனால் மாணவன் இணைப்பு ஒயரை பிளக்கில் மாட்டிய போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த மாணவனை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சாக்கோட்டை காவல் துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும், பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் பொய்யாவயல் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர் பாண்டி முருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலு உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்:-
சிவ பிரசாத்.கா