12 ஆண்டுகளாக நடந்த லஞ்ச வழக்கில் அதிரடி தீர்ப்பு!!

26 March 2025

குமரி. 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு



கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளராக இருந்தவர் சுயம்புலிங்கம். கடந்த 2012 ஆம் ஆண்டு ரவி அசோகன் என்பவர் தனக்கு உரிமை பட்ட சொத்தின் ஆவணம் சான்றிட்ட நகல் வழங்க கோரி இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்த சுயம்புலிங்கத்திடம் கடந்த 18-12-2012 அன்று மனு சமர்ப்பித்து உள்ளார். மனுவை பெற்ற சார்பதிவாளர் சுயம்புலிங்கம் சான்றிட்ட மனு வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி அசோகன் அது குறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போது ஆய்வாளராக இருந்த ஆய்வாளர் சால்வன்துரை (தற்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்) வழக்குப்பதிவு செய்தார். அதன் பின்னர் அப்போது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுந்தர்ராஜ் ( கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஓய்வு) ரவி அசோகன் சார்பதிவாளர் சுயம்புலிங்கம் கேட்ட 2000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது சார்பதிவாளர் சுயம்பு லிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அதன்படி மேற்படி வழக்கை அப்போதைய ஆய்வாளர் ஹெக்டர் தர்மராஜ் (தற்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) புலன் விசாரணை செய்து 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடித்து இன்று 25-03-2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் அவர்கள் மேற்படி வழக்கில் எதிரியான சார் பதிவாளர் சுயம்புலிங்கத்திற்கு இரண்டு சட்ட பிரிவுகளுக்கு தலா மூன்று வருட சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன் 

அவர்கள் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
கேபி.தமிழ்வாணன்